பரோல் வழங்கப்பட்ட சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 3 நிபந்தனைகள்!

கணவர் ம.நடராஜன் மறைவைத் தொடர்ந்து 3 நிபந்தனைகளுடன் சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பரோல் வழங்கப்பட்ட சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 3 நிபந்தனைகள்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது கணவர் நடராஜனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பலனின்றி ம.நடராஜன் திங்கள்கிழமை இரவு 1.30 மணியளவில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து பெசன்ட்நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நடராஜன் உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான விளாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கணவரின் மரணத்தைத் தொடர்ந்து தனக்கு பரோல் வழங்குமாறு சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு 15 நாள் பரோல் வழங்கி சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 3 நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை, 

  • எண் 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும்.
  • பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
  • பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது என்பவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com