என் அரசியல் பின்னணியில் பாஜக இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
என் பின்னால் பாஜக இல்லை, என் பின்னால் இருப்பது கடவுளும், மக்களும்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆன்மிகப் பயணமாக கடந்த 10 -ஆம் தேதி சென்னையில் இருந்து இமயமலை பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா, உத்தரகண்ட் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை திரும்பினார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. ஆன்மிகப் பயணம் சென்று வந்த பிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. ரத யாத்திரை என்பது மதக் கலவரத்துக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், அரசு அதனைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
வேலைநிறுத்தம் பிடிக்காத வார்த்தை: முதலில் இருந்தே நான் சொல்லிக் கொண்டே வருகிறேன். சினிமாவில் வேலைநிறுத்தம் என்பதை மட்டும் செய்யவே கூடாது. அது எனக்குப் பிடிக்காத வார்த்தை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும். கமல்ஹாசன் என்னைப் பற்றி கூறிய கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
ஏப்.14-ல் கட்சி அறிவிப்பு இல்லை: என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் இருப்பது கடவுளும் மக்களும்தான்.ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்றார் ரஜினிகாந்த்.