தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, பாஜக ஆட்சியா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டு கைதானபோது மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தையும், பன்முகத்தன்மையையும் குலைக்கின்ற வகையில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 பேருக்கு மேல் யாரும் கூட்டமாக கூடக்கூடாது, நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பதுதான் 144 உத்தரவின் சாராம்சம். ஆனால், ரத யாத்திரை நடத்துபவர்களுக்கு காவல் துறையின் பாதுகாப்பினை அளித்து முறைப்படி அனுமதிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பாஜகவுக்குச் சாதகமாகச் செயல்படும் அரசைக் கண்டிக்கிறோம்.
இதுதொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பினால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறையாகப் பதில் தரவில்லை. பேரவைத் தலைவர் எங்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றினார். அதனால் கோட்டைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டோம். தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறதா, அதிமுக ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது என்றார் அவர்.