நடராஜன் உடல் இன்று அடக்கம்
உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான ம. நடராஜனின் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் புதன்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.11 மணி அளவில் நடராஜன் உடல் தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று அடக்கம்: "நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரில் புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, நடராஜனின் உடலுக்கு இறுதிஅஞ்சலியும், தஞ்சாவூர் அருளானந்த நகரிலிருந்து இறுதி ஊர்வலமும் நடைபெறும்' என நடராஜனின் மைத்துனரும், சசிகலாவின் தம்பியுமான வி. திவாகரன் தெரிவித்தார்.
முன்னதாக, நடராஜன் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸுடன் தனி காரில் சசிகலா, டிடிவி. தினகரன், அவரது மனைவி உள்ளிட்டோர் வந்தனர்.
எங்களுக்கு பேரிழப்பு: "நடராஜனின் இழப்பு எங்களுக்கும், எங்களது குடும்பத்துக்கும் தாங்க முடியாத பேரிழப்பு' என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காத்திருந்த சசிகலா: நடராஜனின் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸுக்காக சசிகலா, திருச்சி அருகேயுள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்தார்.
அஞ்சலி செலுத்திய எம்எல்ஏக்கள்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ரெங்கசாமி, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோரும், எம்எல்ஏக்கள் ரெத்தினசபாபதி, கலைச்செல்வன் உள்ளிட்டோரும் நடராஜன் உடலுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.