மத அமைதியைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
மதுரை கூடல் புதூர் மற்றும் சிக்கந்தர்சாவடியில் ஜெபக் கூட்டம் நடைபெற்றபோது கிறிஸ்தவர்களைச் சிலர் தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக உறுப்பினர் ஆஸ்டின் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம்: மதுரை அன்பு நகர், செல்லையா நகர் மற்றும் ஆணையூர் ஆகிய இடங்களில் மார்ச் 11-இல் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஜெப நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் அங்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களைத் தகாத வார்த்தை பேசி ஜெபக் கூட்டம் நடத்தக்கூடாது என எச்சரித்துள்ளனர். இதைப் போல அன்றைய தினம் மதுரை சிக்கந்தர் சாவடி, மந்தையன் கோவில் தெருவில் ஜெபக்கூட்டம் நடைபெற்றபோது, அடையாளம் தெரியாத சிலர் அந்த இடத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிலரைத் தாக்கி அங்கிருந்த சில பொருள்களைச் சேதப்படுத்தியுள்ளனர். பைபிளைப் பிடுங்கி தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கூடல் புதூர் காவல் நிலையம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்து முன்னணி ஆணையூர் பகுதி பொறுப்பாளர் சதீஷ்பாபு மத்திய அரசுக்கு எதிராக ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அனுமதியின்றிக் கூட்டங்கள் நடத்துவதாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புவதாகவும் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மத அமைதியைக் குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அதிமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.