ஈரோடு: தற்பொழுது நடைபெற்று வரும் இந்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை அண்ணா நகர் பெரியார் திடலில் சனிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறுகிறது.
மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:
தற்பொழுது நடைபெற்று வரும் இந்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக என்னும் கட்சி இரண்டாக உடையும் என்பதனை முன்கூட்டியே கணித்துக் கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் திமுக தலைவர் எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் சரியான ஆலோசனை வழங்குவதற்கும் தான்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.