தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், சில டீ கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மாநகரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், சமூக ஆர்வலர்கள் பாத்திமாபாபு, மா. கிருஷ்ணமூர்த்தி, மருதப்பெருமாள், பாஸ்கர், நெய்தல் அன்டோ மற்றும் குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.