தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால் தூத்துக்குடி மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆலையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் ஆலையானது, சிப்காட் நிறுவனத்தின் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஆலையின் விரிவாக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதை எதிர்த்து குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலத்தை, நில உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்தப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.