காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில், காலை 10 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரும் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.