கிணத்துக்கடவு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக எம்.பி ஒருவருக்கு, எலி மருந்து அனுப்பப்பட்டவிவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது
ஆனால் அளிக்கப்பட்ட அவகாசம் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு , 15 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கினார். அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் காவிரி நீதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஏற்படுத்தாவிட்டால், தற்கொலை செய்து கொள்வதற்கும் அதிமுக எம்.பிக்கள் தயாராக உள்ளதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்திலேயே அதிரடியாக பேசினார்.
அவருடன் சேர்ந்து அதிமுக எம்பிக்கள் மூன்று பேரும் எம்.எல்.ஏ ஒருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய தயார் என கூறினர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக எம்.பி ஒருவருக்கு எலி மருந்து அனுப்பப்பட்டவிவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார்மணி என்பவர் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திரனின் தில்லி முகவரிக்கு, எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார். இது பரவலாக அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.