காவிரி விவகாரம்: மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15 இளைஞர்கள் கைது!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தொடர் விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர்,, தேடுதல் வேட்டை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கைது செய்த்தனர்.
அப்போது கைதான் இளைஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் ஐ.சி.எப் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு எந்த விதமான பின்னணியும் கிடையாது. எந்த அரசியல் கட்சியினையும் சார்ந்தவன் இல்லை. சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமே என்பதே எனது ஒற்றைக் கோரிக்கை. இதற்காக உண்ணாவிரதம் என்பதெல்லாம் பயனற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாப்பிடாமல் இருந்து என்ன பலன்? கடந்த 40 நாட்களாக ஒன்றும் செய்யாதவர்கள் இப்பொது மட்டும் என்ன செய்து விட போகிறார்கள்?
இது யாரும் ஏற்பாடு செய்யாமல் தானாக உணர்வினால் எழுந்த போராட்டம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டத்தினைத் தொடர்ந்து அங்கு அதிகளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பட்டிணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடைபெறுவதுடன், சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ள இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் விளைவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.