கண் மருத்துவப் பாடத் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மாணவி பாரதி தாக்கல் செய்த மனுவில், ' கடந்த 2016, 2017 -ஆம் ஆண்டுகளில் கண் மருத்துவ பாடத் தேர்வு எழுதி தோல்வி அடைந்தேன். இந்த தேர்வில் தேர்ச்சி பெற 3 மதிப்பெண்கள் இருந்தால், அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர முடியும். எனவே, அந்த 3 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி ஐந்து மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்களாக வழங்க முடியும். எனவே, தனக்குத் தேவையான மூன்று மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'இரண்டாவது முறை தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படியும், செய்முறை தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்ற புதுச்சேரி பல்கலைக்கழக மருத்துவ விதிகளின் அடிப்படையிலும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.