நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பல்வேறு குழப்பங்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் மாணவி ஜீவிதாவுக்கு போலியான ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேவை மையமான டிஜிட்டல் சேவா பொது சேவை மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
சேலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற தனது மகளுக்கு ஹால்டிக்கெட் குளறுபடியால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மகளின் எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவயின் தந்தை தெரிவித்துள்ளார்.