ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளில் 330 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 20 -ஆம் தேதி, சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வினை எழுத 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விவரங்ளைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net , www.tnpscexams.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application No..) அல்லது பயனாளர் குறியீடு (Login ID) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை அளித்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தனது அறிவிப்பில் சுதன் தெரிவித்துள்ளார்.