பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரையும், ஆளுநர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இதை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது கர்நாடக மாநிலம் பார்க்கிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களும் இதனை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.