சென்னை: குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறை அதிகாரிகள் திரு.டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்ய அனுமதித்து பெருந் தொகைப் பெறப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு.டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பான வழக்கில் அமைச்சர் உட்பட உயர்அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் வழக்கை மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றும் படி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவில்லை. எனினும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை இன்று (18.05.2018) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறை அதிகாரிகள் திரு.டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பொறுப்பில் இருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். அல்லது இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெற, முதலமைச்சர் வழக்கில் தொடர்புடையோர் அனைவரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.