தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது யூனிட் தொடங்குவதற்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பாத்திமா தாக்கல் செய்த பொதுநல மனு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தற்போது இயங்கி வரும் பகுதியில், தனது தனது இரண்டாவது யூனிட்டை விரிவுபடுத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கடந்த 2009-இல் அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 ஜூலை மற்றும் 2016 ஜூன் ஆகிய காலங்களில் அனுமதியை புதுப்பித்துள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனம் இரண்டாவது யூனிட்டுக்கு அனுமதி பெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் பணிகளை நடத்தி வருகிறது. ஏற்கெனவே அனுமதி பெற்ற இடத்தை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடத்தில் இரண்டாவது யூனிட்டை தொடங்குவது சட்ட விரோதம்.
இது சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் விதிகளுக்கு எதிரானது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் ஆலை நிர்வாகம் கேட்கவில்லை.
எனவே இரண்டாவது யூனிட் தொடங்குவது தொடர்பாக நிர்வாகம், பொதுமக்களின் கருத்தை கேட்கவேண்டும். மேலும், இரண்டாவது யூனிட் தொடங்குவதற்கு மத்தியச் சுற்றுச்சூழல்துறை வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மத்தியச் சுற்றுச்சூழல் துறைக்கு தவறான தகவல் அளித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.