இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக சென்னையிலுள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் திரளும் நிகழ்வுகள் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தள்ளது. எனவே தடையை மீறி நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள சாலைகள் முழுவதும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.