சென்னை: அரசு என்பது மக்களுக்காக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்காக அல்ல என்று தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அரசு என்பது மக்களுக்காக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்காக அல்ல என்று தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தப் போராட்டம் சமூக நலனுக்காக நடந்ததேயன்றி, சொந்த நலனுக்காக அல்ல. 50 ஆயிரம் பேர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுவது என்பது, தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும் ஒரு விஷயத்தை மிகப்பெரிய மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறது என்பதைக் காட்டுகிறது.
அன்பான பிரதமரே... தயவுசெய்து இப்போதாவது உங்கள் மவுனத்தைக் கலையுங்கள். ‘போராட்டம் என்பது ஜனநாயகத்தின் வடிவம்’என பாஜக கூறியிருக்கிறது. அதையே மக்கள் ஏன் செய்யக்கூடாது?
அரசு என்பது மக்களுக்காக இருக்க வேண்டும், மற்றவர்களுக்காக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.