தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்ற கிராம மக்களுக்கும், அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், கிராம மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
அப்போது கிராம மக்களில் சிலர் காவல்துறையினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காவல்துறை வாகனம் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் சேதப்படுத்தப்பட்டது. தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.