தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு குவிந்த பொதுமக்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே மருத்துவமனையில்தான் காயமடைந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும், ஏராளமான பொதுமக்களும் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு குவிந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பொதுமக்கள் வாக்குவாதம் செய்து வந்தனர். ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஏராளமான பொதுமக்கள் கூடியதால், காவல்துறையினர் பொதுமக்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போதும் கலைந்து செல்லாத பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
காவல்துறையின் தடியடிக்கு அஞ்சி, பொதுமக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
பொதுமக்களை விரட்டியடித்த காவல்துறையினர், அரசு மருத்துவமனை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.