தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறைவன்தான் விடை கொடுக்க வேண்டும் என லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தில், துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கொடுமையானது. துப்பாக்கி சூட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் இறைவன்தான் கொடுக்க வேண்டும் விடை. ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜெயலலிதா உத்தரவிட்டார் என்று கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள், ஆலைக்கு பாதுகாப்பு கொடுப்பது ஏன்? பெயருக்காக அலையும் சிலர் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பகடைக்காய்களாக மாற்றியுள்ளார்கள் என்றார் அவர்.