திருத்தணியில், மின்சார ரயில் கடந்த ஒரு மாதமாக காலதாமதமாக வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், அரசு மற்றும் தனியார் துறைஊழியர்கள் விரைவு ரயில், பாசஞ்சர் மற்றும் மின்சார ரயிலில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்கின்றனர். குறிப்பாக, காலை நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் அதிகளவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக, திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினசரி காலை 6.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலில் 90 சதவீதம் பேர் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், காலை 6.25 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் கடந்த ஒரு மாதமாக காலதாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். சில ஊழியர்கள் ரயில் காலதாமதமாக வந்து செல்வதால், அடிக்கடி பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ரயிலை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு வந்து 6.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் காலை 6.50 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், அந்த ரயிலையும் அவ்வழியாக வந்த மேலும் ஒரு ரயிலையும் சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸார் மற்றும் திருத்தணி டிஎஸ்பி சேகர், திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், ஆய்வாளர் விநாயகம் உள்ளிட்டோர் ரயில் நிலையத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன்பின்னர், பயணிகள் மறியலை கைவிட்டனர். இதனால், காலை 6:30 மணி முதல் 8.30 மணி வரை திருத்தணி ரயில் நிலையத்தில் ரயில்சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.