தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு வெள்ளியன்று மாலை மர்மநபர்கள் தீ வைத்ததன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 22-ஆம் தேதியன்று காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
நான்காவது நாளான வெள்ளியன்று மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப் பேருந்துக்கள் காலை முதல் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
இந்நிலையில் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு வெள்ளியன்று மாலை மர்மநபர்கள் தீ வைத்ததன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. மாலை ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றனர் என்று அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா சம்பவ இடத்திற்கு விரைந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.