நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தையடுத்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கே.கே.ரமேஷ், முத்துக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் இணையதள சேவை முடக்கம் என்பது ஏற்புடையது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.