புதிய வழித்தடங்களில் பயணிக்கும் மெட்ரோ ரயில்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

சென்னைவாசிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்களில் பயணிக்கும் மெட்ரோ ரயில்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை


சென்னை: சென்னைவாசிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை - ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் பயணிகள் சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது.

பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏஜி - டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களின் சிறப்பம்சங்கள்: 

இன்று துவக்கி வைக்கப்படும் புதிய வழித்தடத்தில் 6 குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் அடங்கும்.

பயணிகளின் பாதுகாப்புக்காக, வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த நடைமேடை திரைக் கதவு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நடைமேடையும் (ரயில்வே பிளாட்ஃபார்ம்) முற்றிலும் மூடப்பட்டு, ரயில் வரும் போது அதற்கான திரைக்கதவுகள் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை இருந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னை ஏஜி - டிஎம்எஸ் வரை நீட்டிக்கப்படுகிறது.

சின்னமலையில் இருந்து சைதாப்பேட்டை வழியாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்கும்.

அதாவது, சின்னமலையில் இருந்து ஏஜி - டிஎம்எஸ் இடையேயான 4.35 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா வரை இருந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நேரு பூங்கா வரை இருந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது 2.5 கி.மீ. தூரம் நீட்டிக்கப்பட்டு சென்னை சென்ட்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதுவும் முழுக்க முழுக்க சுரங்கப் பாதை வழித்தடம்.

இதன் மூலம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரை பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து விமான நிலையம் செல்ல ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்ல ரூ.60 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com