சென்னை: தமிழகம் இன்றி வெளி மாநில, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கூட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றியே பேசி வரும் நிலையில், அதனை திசை திருப்பும் வகையில் ஜெயலலிதாவின் ஆடியோ வெளியாகியிருக்கிறதா?
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வியாழக்கிழமை, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், அவர் மருத்துவமனையில் பேசிய ஆடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அதாவது 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி, தனக்குத் தேவையான உணவுகள் குறித்து அவர் கைப்பட எழுதிய நாட் குறிப்பும் இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
விசாரணை ஆணையத்தில் மருத்துவர் தாக்கல் செய்த ஆடியோ இன்று ஊடகங்களில் வெளியானது ஏன்? என்று பல சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை திசை திருப்பவே இப்படி ஒரு ஆடியோ வெளியானதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை நடத்தி வரும் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் வைத்திருந்தார். அதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு கடந்த ஜனவரி மாதமே ஒரு ஆதாரமாக தாக்கல் செய்தும், அதனை ஆணையம் ஏற்று கொண்டு பதிவு செய்து கொள்ளவில்லை. எனவே அது இன்று விசாரணை ஆணையத்திடம் மீண்டும் போட்டுக் காண்பிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியானது என்று கூறியுள்ளார். இதில் எந்த பின்னணியும் இல்லை என்பதே அவரது கூற்று.