சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இயங்கும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய இளைஞர், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினார். மேலும் அவர், மாநிலம் முழுவதும் சனிக்கிழமை வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள், அந்த அழைப்பில் பேசிய நபர் குறித்து விசாரணை செய்ய சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டனர். சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த அழைப்பு மதுரை பேரையூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது செல்லிடப்பேசியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற தனிப்படை போலீஸார், மாரியப்பனை பிடித்து இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.