மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கு ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக சுகாதாரத் துறையினருக்கு இந்த முகமை அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் உமாநாத், சுகாதாரத் துறை இணைச் செயலர் கிரண் குராலா ஆகியோர் ஜப்பான் நாட்டுக்கு மே 17-ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: பயணத்தின்போது ஜப்பான் நாட்டின் சுகாதாரத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள், தொற்றாநோய்களுக்கு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளப்பட்டது.
அதிநவீன மருத்துவ உபகரணங்களான ஆஞ்சியோகிராபி, மொபைல் எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனம், டோக்கியோ ஷிபாவில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை, ஆஷிககா மருத்துவமனை உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் குறித்தும் ஜப்பான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் அதிநவீன மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொடங்குவதற்கும், அதிகளவில் முதலீடு செய்வதற்கும் தங்களின் ஆர்வத்தைத் தெரிவித்தனர்.