தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமும் அதன் காரணமான உயிரிழப்புகளும் துரதிர்ஷ்டவசமானது. மிகவும் கவலை அளிக்கக் கூடியது.
இத்தகைய பதற்றமான சூழலில் பணிபுரியும் அதிகாரிகள் அங்கு நிலவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பார்கள்.
தற்பொழுது தூத்துக்குடியில் அமைதியினை நிலைநாட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உழைத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரும் சூழலை சரியாக்க பெருமுயற்சி எடுத்து வருகின்றனர்.
அமைதியினை நிலைநாட்டும் முயற்சிகளில் படிப்படியாக அங்குள்ள காவலர்களின் எண்னிக்கை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .