பாம்பன் சாலைப் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
சென்னையில் உள்ள தலைமைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை காலை பேசிய ஒருவர், பாம்பன் சாலைப் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று பாம்பன் சாலைப் பாலம், ரயில் பாலத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால், ரயில், பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அங்கு, வந்த டிஐஜி காமினி ஆய்வு குறித்து கேட்டறிந்தார். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்துக்குப் பின்பு பாம்பன் பாலத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்: சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, சிறுவனை பாதுகாப்புடன் வைக்குமாறு அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.