மதுரை: மோடி என்ன வெளிநாட்டு பிரதமரா என்று திமுக செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் ஞாயிறன்று மதுரை வந்திருந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி இந்தியாவிற்குள்தான் உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது. மோடி என்ன வெளிநாட்டு பிரதமரா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஞாயிறன்று சந்தித்தது கபடநாடகம். நாளை ஓபிஎஸ் தூத்துக்குடி வருவதாகத் தெரிவித்துள்ளார். அது உண்மையா என்று தெரியவில்லை.
தமிழக காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே தமிழக மக்களுக்கு மிகவும் பாதுகாப்பு.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.