தூத்துக்குடியில் ஓபிஎஸ்: காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்.
தூத்துக்குடியில் ஓபிஎஸ்: காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியால் காயம் அடைந்த 48 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காவல் துறையினரின் தூப்பாக்கிச் சூட்டுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. கமல்ஹாசன், ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். 

ஆனால், அரசு சார்பில் அமைச்சர்களோ முதல்வரோ யாரும் நேரில் சென்று காணவில்லை. இது, அதிமுக மீது விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) தூத்துக்குடி செல்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. 

அதன்படி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியால் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நலம் விசாரித்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ மற்றும் ராஜலெட்சுமி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், பன்னீர்செல்வம் பங்கேற்க இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com