தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அனுமதித்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனிடையே, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 1-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஒருவரான சுகாதாரத் துறை அதிகாரி இ. சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மே 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
விசித்திரமான உண்மைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முடிவில் மாறுபட விரும்பவில்லை. சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.