கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 6 பேர் சாவு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 6 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 6 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை பரவி வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி கவிதா (24), ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் பிரேம்குமார் (45), ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் அண்ணாமலை (45) ஆகியோர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதேபோல, கோவை மாவட்டம், சோமனூர் பகுதியைச் சேர்ந்த சுப்பன் (70), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி சுமித்ரா (38) ஆகியோர் மூளைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் தெய்வசிகாமணி (45) வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். இவரும் திங்கள்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 12 நாள்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு ஒருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 59 பேரும் என மொத்தம் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லையில் மர்மக் காய்ச்சல்
திருநெல்வேலியில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பெண் உள்பட இருவர் திங்கள்கிழமை இறந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான ராஜாவின் மனைவி அமலி பிச்சுமணி (55) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்ததாம்.
சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவர், சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர்கள் இருவரும் திங்கள்கிழமை இறந்தனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com