டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை (நவ.10) கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கூறினார்.
கடலூரில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் தினமும் ரூ.100 கோடி வரை பணம் வசூலாகிறது. இந்தப் பணத்தை கடைகளிலேயே இரவில் வைத்திருந்து, மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், கடைகளில் பணத்தை வைக்கக் கூடாது என காவல் துறை தெரிவிப்பதோடு, உரிய பாதுகாப்புடன் ஊழியர்களின் வீட்டுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வலியுறுத்துகிறது.
ஆனால், இவ்வாறு பணத்தை எடுத்துச் சென்ற போது வழிப்பறி செய்வதற்காக நடைபெற்ற மோதலில் இதுவரை 3 டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பாதுகாப்புக்குச் சென்ற காவலரை வெட்டிவிட்டு அண்மையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் ஊழியர்களே பணத்தை திருப்பிச் செலுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இதை மாற்றி சென்னையில் உள்ளதுபோல இரவு நேரத்தில் அரசே வாகனம் மூலமாக பணத்தை பெற்றுச்செல்லும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அவர்.