ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்துறை அமைச்சகமே நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்யக்கோரி 2016-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதலளிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டு தமிழக அரசுக்கு பதில் அனுப்பியிருந்தது. அதில், இந்த 7 பேரையும் தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் அந்த பரிந்துரை நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை நிராகரித்தது மத்திய அரசா? குடியரசுத் தலைவர் அலுவலகமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கான காரணத்தை பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குடியரசுத் தலைவர் அலுவலகத்திடம் எழுப்பியிருந்தார். ஆனால், இதுதொடர்பாக எந்தவித பரிந்துரை கடிதமும் தங்களுக்கு வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளன் கோரியிருந்த ஆர்டிஐ-க்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் பதில் அனுப்பியிருந்தது. அதில், பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்படவில்லை என்றும், அதை நிராகரித்ததற்கான முடிவை உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளே எடுத்ததாகவும் உறுதிபடுத்தியது.
இதன்மூலம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதற்கான தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை மத்திய அரசே நிராகரித்துள்ளது என்ற தகவல் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.