ஜவாஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ள தீன்மூர்த்தி பவனின் அடையாளத்தை மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாஜக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கு அடங்காமல் சென்றது மட்டுமல்ல, அதற்கான வரி நிர்ணயங்களின் மூலம் ரூ. 11 லட்சம் கோடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கருவூலத்துக்குச் சென்றுள்ளது.
சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் சிலை வைத்து பாஜக கொண்டாடுகிறது. இந்தச் சிலை பாஜக-வின் உண்மை நோக்கத்தை பிரதிபலித்திருக்கிறது. மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலம் என்பதை மாற்றி, "படேல் பூமி' என்று சித்திரிப்பதன் மூலம் தேச தந்தை காந்தியின் புகழை மறைக்கலாம் என கனவு காண்கின்றனர்.
இதேபோன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் புகழை அழிக்கும் வகையில், நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தை, அனைத்துப் பிரதமர்களுக்கான நினைவு இல்லமாக மாற்ற பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. தீன்மூர்த்தி பவனில் மாற்றங்கள் செய்யக் கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார்.