பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழ், மொழி, இனம் ஆகியவற்றைக் காப்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும். அப்போது கட்சியின் பெயர், கொடி, கட்சிக்கான கொள்கை மற்றும் கோட்பாடு போன்றவற்றை அறிவிப்போம். தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம்.
வந்தாரை வாழ வைத்து, ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள் எங்களின் எதிரிகள்.
ரஜினி, கமலை திரைக்கலைஞர்களாக நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அரசியல் களத்தில் எதிர்ப்போம். ரஜினிகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார் கெளதமன்.