நாள்பட்ட நோய்களாலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார் என குறுக்கு விசாரணையின்போது அப்பல்லோ மருத்துவர் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த விசாரணையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், நரசிம்மன், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கோத்தகிரி கிளை மேலாளர் அலோக் குமார் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
டாக்டர் நரசிம்மனிடம் நடைபெற்ற குறுக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து கேட்கப்பட்டது. அப்போது, அவரது அறிவுறுத்தலின்பேரில்தான் அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது தனக்கு புத்தகம் ஒன்றை அவர் பரிசாக அளித்தார். அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. நாள்பட்ட நோய்களாலேயே அவர் உயிரிழந்தார் என்று டாக்டர் நரசிம்மன் கூறினார் என வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.