போக்குக் காட்டும் கஜா புயல்: மீண்டும் பாதையை மாற்றியது

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நவம்பர் 15ம் தேதி மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போக்குக் காட்டும் கஜா புயல்: மீண்டும் பாதையை மாற்றியது


சென்னை: வங்கக் கடலில் உருவான கஜா புயல் நவம்பர் 15ம் தேதி மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நாளை கரையை கடக்கவிருப்பதால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டநிர்வாகங்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.45 மணியளவில் கஜா புயல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வேகம் குறைந்து மிகக் குறைந்த வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக் கடலில் கிழக்கு திசையில் சென்னையில் இருந்து 520 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 620 கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இதுவரை மேற்கு வடமேற்காக நகர்ந்து வந்த கஜா புயல் தற்போது மேற்கு தென்மேற்காக நகர்ந்து வருகிறது. இன்று இரவு 11 மணிக்குள் தீவிரப் புயலாக வலுவடைந்து, நாளை மாலை தமிழகத்தின் பாம்பன் - கடலூர் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் முன் வலுவிழந்து புயலாக மாறி கரையை கடக்கும்.

இது கரையைக் கடந்த பிறகு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக அரபிக் கடலை நவம்பர் 17ம்  தேதி சென்றடையும்.

கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது அதன் நகர்வு வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. ஆக உள்ளது. 

முன்னதாக 15ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com