கிராமத்துப் பெண் ஒருவர் பாடும் விடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பெண்ணை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னவளே... என்ற பாடலின் தெலுங்கு வடிவமான ஓ செலியா... பாடலை அந்த பெண் பாடுவது இணையதளங்களில் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், கேரளத்தைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற தொழிலாளி விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாது நான்... என்ற பாடலைப் பாடும் விடியோ பரவலாக பேசப்பட்டது. அந்தப் பாடலைப் பாடியவரான ஷங்கர் மகாதேவன் அந்த விடியோவைப் பகிர்ந்து பாராட்டியிருந்தார். கமல்ஹாசன் கேரளம் சென்றபோது ராகேஷ் உன்னியை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
அதே போன்று மற்றொரு நிகழ்வு ஆந்திரத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1994 -இல் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னவளே... பாடலின் தெலுங்கு வடிவமான ஓ செலியா.... இந்தப் பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் விடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது. யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரத்தில் 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த விடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர் யாரென்று தெரியவில்லை; அருமையான குரல் என்று பாராட்டியுள்ளார்.
சினிமாவில் பாட வாய்ப்பு: அந்தப் பெண்ணின் பெயர் பேபி என்றும், அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பேபியின் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ், அவருக்கு தனது இசையில் சினிமாவில் பாட வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.