கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 30,000 வீடுகள், 68,000 மரங்கள், 40,000 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஆட்சியரகத்தில் செய்தியாளர்களிடம் அரசு முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பிரதீப் யாதவ், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகளின் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணி முடிவடைந்துள்ளது. மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய வட்டாரங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற வட்டாரங்களிலும் சேதம் அதிகமாக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8,226 பேர் 34 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் இறந்துள்ளதாகக் காவல் துறை மூலம் தகவல் வந்துள்ளது. தவிர, 40 பசு மாடுகள், 11 எருமை மாடுகள், 98 ஆடுகள், 117 செம்மறியாடுகள், 8 எருதுகள், 12 கன்றுகள் ஆகியவை இறந்துள்ளன. மாவட்டத்தில் 6,265 குடிசைகள் முழுமையாகவும், 11,157 குடிசைகள் பகுதி அளவாகவும், 13,385 ஓடுகள் வேயப்பட்ட வீடுகள் பகுதி அளவாகவும் சேதமடைந்துள்ளது. சுமார் 191.40 கி.மீ. அளவுக்குச் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் சுமார் 2,017 கி.மீ. தொலைவிலான சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலையில் உள்ள மரங்கள் திங்கள்கிழமைக்குள் அகற்றப்படும். சுமார் 36,600 வனத்துறை மரங்களும், 31,482 இதர மரங்களும் சாய்ந்தன.
சாலையில் விழுந்துள்ள மரங்களை 4,469 பணியாளர்கள் மூலம் 109 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 177 ஜே.சி.பி. இயந்திரங்கள், ஒரு புல்டோசர், 37 பொக்லைன் இயந்திரங்கள், 51 லாரி, 18 நவீன ஜெனரேட்டர்கள், 78 ஜெனரேட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கஜா புயலால் 8,748 மின் கம்பங்களும், 200 கி.மீ. தொலைவில் மின் கம்பிகளும், 15 மின் மாற்றிகளும், பட்டுக்கோட்டையில் ஒரு துணை மின் நிலையமும் சேதமடைந்துள்ளன.
மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்கும் பணியில் 1,180 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகரில் 65 சதவீதமும், கும்பகோணம் நகரில் 100 சதவீதமும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் 20 சதவிகிதம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.