தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில், சற்று வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் திங்கள்கிழமை நிலை கொள்ளக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மழை பெய்யும்.