வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் மீண்டும்  நிலச்சரிவு

வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால், கனரக வாகனங்கள் செல்ல 2 நாள்களுக்கு தடைவிதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
கொடைக்கானல் அடுக்கம் பிரிவு அருகே ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட   இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு.
கொடைக்கானல் அடுக்கம் பிரிவு அருகே ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட   இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு.

வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால், கனரக வாகனங்கள் செல்ல 2 நாள்களுக்கு தடைவிதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
கஜா புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக, கொடைக்கானல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் அடுக்கம் பிரிவு அருகிலும், குருசடி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டது.
மேலும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல், பல்வேறு இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு நேரத்திலும் மேற்கொண்ட மீட்புப் பணிகளால், நிலச்சரிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, சனிக்கிழமை பிற்பகல் முதல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 
வத்தலகுண்டு மலைச் சாலை வழியாக கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை 6 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில், அடுக்கம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வத்தலகுண்டு- கொடைக்கானல் மலைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும், இலகு ரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இதனிடையே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் 2 நாள்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சாரல் மழை பெய்து வருவதால், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல், பழனி-கொடைக்கானல் மலைச் சாலையிலும், ஆணைகிரி பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. ஆனாலும், இரவு நேரத்தில்  பாதுகாப்பு கருதி கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திங்கள்கிழமை காலை முதல் இச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என, வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
4-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு: கொடைக்கானல் அடுத்துள்ள செண்பகனூர், அட்டக்கடி, கேபிஎன் பாறை, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மேல் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கல் மற்றும் கீழ்மலை கிராமங்களிலும் கடந்த 4 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com