சென்னை: தமிழகத்தில் நாகை மாவட்டம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, நாகை - புதுச்சேரி இடையேயான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையால் மாவட்டம் தீவிரமாகக் கண்காணிப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், அத்தியாவசியப் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று ககன்தீப் சிங் கூறியுள்ளார்.
மேலும், வீராணம், பெருமாள், வாலாஜா உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.