சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்ல வேண்டிய பயணிகள் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோயம்பேட்டுக்குப் பயணிக்கும் நிலை ஏற்படாது.
அச்சோ.. பேருந்து ஏற கோயம்பேடு போகாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கா போக முடியும் என்று அதிராதீர்கள். பேருந்தில் பயணிக்க இனி நீங்கள் கேகே நகர் பேருந்து நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
ஏற்கனவே ஆந்திர மாநிலத்துக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளையும் கேகே நகர் பேருந்து நிலையத்துக்கு மாற்றியுள்ளது அரசுப் போக்குவரத்துக் கழகம்.
இதன் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 187 பேருந்துகள் தற்போது கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படுவதோடு, பயண நேரத்தில் 30 நிமிடம் அளவுக்குக் குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் உண்டாகும் தாமதத்தை ஈடுகட்ட பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகத்தில் பேருந்தை இயக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகி விபத்துகள் நேரிட்டன.
தற்போது பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்களின் மன அழுத்தம் குறைந்து, விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.