தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுபவர்கள் கல்லூரிகளில் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
ஆனால், துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தங்கசாமி, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை மட்டுமே பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே விதிமுறை களுக்கு முரணான இந்த துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சுந்தரராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.