ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் வரும் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மீனவ சங்க செயலாளர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க வேண்டும். சேதமடைந்த விசைப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ரூ. 30 லட்சம் வரை இழப்பீடு வழங்கிட வேண்டும். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து ராமநாதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் சகாயம், எமரிட் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.