சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமி சார்பில் பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு "சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படவுள்ளது.
இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 10-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ளது. விழாவில் பண்டிட் ஹரிபிரசாத் செளராஸ்யா, சங்கீத கலாநிதி டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக விக்கு விநாயக்ராம் நடத்தும் "குரு லய சமர்ப்பணம்' சிறப்பு வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அவரது இசைப்பயணம் குறித்த ஒரு குறும்படம் திரையிடப்படவுள்ளது. கர்நாடக இசையில் அதீத புலமை பெற்ற விக்கு விநாயக்ராம், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கிராமி விருதை பெற்ற முதல் இசைக் கலைஞர். கடந்த 1997-ஆம் ஆண்டு "சங்கீத கலா ஆச்சார்யா' விருதும் இவருக்கு மியூசிக் அகாதெமியால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.